மத்தியப்பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுகொண்டிருந்த மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.
மத்தியப் பிரதேசம் ஷாதோல் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மினி லாரி கவிழ்ந்ததில் சிறுவன் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 36 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து பியோஹாரி காவல் நிலையத்தின் பொறுப்பாளர் கதிர் சோனி கூறியதாவது, திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக 42 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற மினி லாரி ஒன்று தோலாரில் இருந்து டோல் கிராமத்திற்குச் சென்ற கொண்டிருந்தனர். அப்போது டிகாஹி கிராமத்தில் ஒரு தாபா அருகே திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 15 வயது சிறுவன் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 36 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். படுகாயமடைந்த 10 பேர் ஷாதோல் மருத்துவக் கல்லூரியிலும், மற்றவர்கள் பியோஹாரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.